Monday, December 3, 2012

இராஜேஸ்வரி சண்முகம்


இராஜேஸ்வரி சண்முகம்

வானொலியில் ஒலித்த ஒரு குரல் உலகையே இலங்கை வானொலியை நோக்கி திரும்பிப்பார்க்கச் செய்தது. அவர் வணக்கம் என்று சொன்னால் தமிழ் மணக்கும். இனிமை, ஒலிநயம், உச்சரிப்பு என வானொலி நேயர்களை தன் குரலின் வசியத்தால் கட்டிப்போட்டவர். தலைக்கணத்தில் பூச்சியம் அவர் தமிழ் இலக்கணத்தில் இராச்சியம் அவர்தான் இராஜேஸ்வரி சண்முகம். இலங்கை வானொலி தமிழ் ஒலிபரப்பில் அறிவிப்பாளராக கடமையாற்றிய இராஜேஸ்வரி சண்முகம் மழலை குரலை விட இனிப்பாக மொழி பேசியவர். 1938 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி கொழும்பு கொட்டாஞ்சேனையில் இராஜேஸ்வரி பிறந்தார். தனது ஆரம்பகல்வியை ஆங்கில மொழியில் கற்ற அவர் தமிழில் புகழ்பூத்த அறிவிப்பாளராக விளங்கினார். 1952 ஆம் ஆண்டு தனது 14 ஆவது வயதில் வானொலி கலையகத்திற்குள் காலடி  எடுத்து வைத்தவர் இராஜேஸ்வரி எஸ்.எம்.ராமைய்யா எழுதிய விடிவெள்ளி நாடகம் மூலமாக தன் திறமையை வெளிக்காட்டிய இராஜேஸ்வரி புதிய நட்சத்திரமாக உருவெடுத்தார். வானொலி நாடகம், மேடை நாடகம் என எதுவாக இருப்பினும் மங்காத விடிவெள்ளியாகவே இராஜேஸ்வரி திகழ்ந்தார். நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்து தனது மதுரக்குரலால் மக்களை மயக்கிய இராஜேஸ்வரி 1969 ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் பகுதிநேர அறிவிப்பாளராக இணைந்துகொண்டார். 1971 ஆம் ஆண்டில் மாதர்,  சிறுவர் நிகழ்ச்சி தயாரிப்பாளராக செயற்ப்பட்ட அவர் 1974 ஆம் ஆண்டு இலங்கை வானொலியின் நிரந்தர அறிவிப்பாளராக தெரிவு செய்யப்பட்டார். 1982 ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் முதல் தர அறிவிப்பாளராக தகுதிபெற்றார். வயது போனாலும் சிலருக்கு இளமை போவதில்லை. இராஜேஸ்வரியை பொறுத்தவரைக்கும் வயது போக போக அவரது குரலின் இனிமை மேலும் அதிகரித்தது. 1994 ஆம் ஆண்டு இராஜேஸ்வரி இலங்கை வானொலியின் மீ.உயர் அறிவிப்பாளராக தெரிவு செய்யப்பட்டார். அதே ஆண்டில் சிறந்த அறிவிப்பாளருக்கான ஜனாதிபதி விருதும் அவருக்கு கிடைத்தது. 1995 ஆம் ஆண்டு டொக்டர். புரட்சித்தலைவி விருது ஜெயலலிதாவினால் இராஜேஸ்வரி சண்முகத்திற்கு வழங்கப்பட்டது. மொழிவளர் செல்வி என்ற பட்டம் கலாசார அமைச்சின் மூலம் அவருக்கு வழங்கப்பட்டது. ஐரோப்பாவின் பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ், நோர்வே, ஜேர்மன், லண்டன் போன்ற நாடுகளில் இராஜேஸ்வரிக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. சுவாமி விபுலானந்தரின் நூற்றாண்டு பெருவிழாவினை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினால் வாகீச கலாமணி என்ற பட்டம் வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரால் தொடர்பியல் வித்தகர் என்ற பட்டமும், எட்டையபுரம் தென்பொதி தமிழ்ச் சங்கத்தால் வானொலி குயில் என்ற பட்டமும் வழங்கப்பட்டது. விருதுகளும் பதக்கங்களும் பரிசுகளும் இராஜேஸ்வரியைத் தேடிச் சென்று தமது கௌரவத்தை கூட்டிக்கொண்டன. எத்தனையோ பட்டங்கள் பெற்ற போதிலும் தம்பட்டம் இல்லாமல் தயவுடன் பழகிய இராஜேஸ்வரி சண்முகம் அறிவிப்புத்துறையில் மூத்தோர் முதல் இளையோர் வரை அனைவராலும் ‘அம்மா’ என்று கௌரவமாக அழைக்கப்பட்டார். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் 50 வருடங்களுக்கும் மேலாக சேவை புரிந்த இராஜேஸ்வரி சண்முகம் உலகின் தலைசிறந்த பெண் அறிவிப்பாளராக பாராட்டப்பட்டுள்ளார். இலட்சக்கணக்கான, மில்லியன் கணக்கான தமிழ் பேசும் உலக நேய நெஞ்சங்களில் நீங்காத இடத்தை பெற்ற அம்மா இராஜேஸ்வரி சண்முகம் வானொலி நேயர்களின் ஒரு சொத்து என பிரபல கவிஞர் கவிப்பேரரசு வாழ்த்தியுள்ளார். நேயர்களின் சொத்தாக மாத்திரமன்றி ஒலிபரப்பு துறையின் முத்தாகவும் இருந்த இராஜேஸ்வரி சண்முகம் இலங்கை வானொலித் துறையில் கால வெள்ளத்தில் அழியாத கல்வெட்டாய் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ஒரு காலத்தில் இராஜேஸ்வரி சண்முகத்தின் குரல் ஒலிக்காத விளம்பரங்களே இல்லை எனும் அளவிற்கு அவரது புகழ் வானலை வழியே வான் எல்லையை தொட்டிருந்தது. விளம்பர நிகழ்ச்சி, கல்வி நிகழ்ச்சி, சமய நிகழ்ச்சி, செய்தி வாசிப்பு, நேர்காணல். மேடை அறிவிப்பு, பொழுதுபோக்கு நிகழ்ச்சி என அனைத்து நிகழ்ச்சிகளையும் சிறப்பாக செய்யக்கூடிய திறமைகள் பூத்துக்குளுங்கம் நந்தவனமாக இராஜேஸ்வரி சண்முகம் காணப்பட்டார். சினிமா நட்சத்திரங்களும் உலக பிரபல்யங்களும் இராஜேஸ்வரி சண்முகத்திற்கு பேட்டி கொடுத்து தமது புகழை மேலும் உயர்த்திக்கொள்ள ஆசைப்பட்டனர். தனது இறுதி மூச்சு வரை வானொலியோடு இணைந்திருந்து கலைத்துறை மீதான தனது பற்றை பறைசாற்றியவர் இராஜேஸ்வரி சண்முகம். அவரிடம் அறிவிப்பு கலையை கற்றவர்கள் ஏராளம். இன்று அவரது மாணவர்கள் இல்லாத ஊடகங்களே இல்லை. இலங்கை வானொலியிலிருந்து ஓய்வுபெற்ற போதிலும் அவரது குரல் கலைத்துறையிலிருந்து ஓய்வு பெறவில்லை. தள்ளாத வயதிலும் நில்லாது தமிழ் தொண்டாற்றியவர் இராஜேஸ்வரி சண்முகம். 70 வயதுகளிலும் இராஜேஸ்வரி சண்முகம் வானொலி நிகழ்ச்சிகளுக்கு குரல் கொடுத்து வந்தார். பல நிகழ்ச்சிகளுக்கு வரையறை அமைக்கு அளவுகோளாக செயற்ப்பட்டவர் இராஜேஸ்வரி சண்முகம். இறைவன் அவரது வாழ்க்கைக்கும் வரையறை வைத்தான். இராஜேஸ்வரி சண்முகம் எனும் வானொலி குயில் தமது 72 ஆவது வயதில் மௌனத்தை சொந்தமாக்கியது. யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலையில் வைத்து இராஜேஸ்வரி சண்முகம் இறையடி சேர்ந்தார். அவரது இழப்பு இலங்கை வானொலித்துறைக்கு பேரிழப்பாகும். இராஜேஸ்வரி சண்முகம் உலகை விட்டு பிரிந்த போதிலும் அவரது குரல் இன்றும் ஒலி அலைகளில் ரீங்காரமிடுகின்றன. இராஜேஸ்வரி சண்முகம் அறிவிப்புத்துறையில் ஓர் பல்கலைக்கழகமாகும். அவரது ஒவ்வொரு அனுபவமும் ஏனையவர்களுக்கு பாடத்திட்டமாகும். பெண்ணாக பிறந்து தமிழ் மண் எங்கும் சொல்லாட்சி புரிந்த வானொலி குயில் இராஜேஸ்வரி சண்முகம் வானொலி ஒலிபரப்பு துறையில் மகுடத்திற்கு மேல் மகுடம் சூட்டிய மாணிக்கமாகும். தமிழ் ஒலிபரப்பு துறை இருக்கும் வரைக்கும் மறுக்கவோ மறக்கவோ முடியாத சாதனைகளை ............................................பிரசன்னா  

No comments:

Post a Comment

hi