Monday, December 3, 2012

எய்ட்ஸ்



 எய்ட்ஸ் (01.12.2012)
20ம் நூற்றாண்டின்  இறுதிக்காலப்பகுதியிலிருந்து,  இன்று வரை உலகை ஆட்டிப்படைக்கும் பயங்கர ஆட்கொல்லி இது. உலக மனிதர்கள் மத்தியில் பலவிதமான நோய்கள் வந்து மறைந்திருந்தாலும் இந்த நோய் வந்து மனிதன் மறையும் வரை உடலில் ஒட்டியிருக்கும். மனித வரலாற்றில் இதுவரை தீர்வு காணமுடியாத நோயாக உருவெடுத்திருப்பது எச் ஐ வி என அழைக்கப்படும் எய்ட்ஸ் நோயாகும்.  பல மில்லியன் உயிர்களை காவுகொண்டுள்ள இந்த கொடிய நோயைப்பற்றிய முழுமையான விபரங்களை,  அறிந்திருக்க வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் காலத்தின் தேவையாகும். எச் ஐ வி எனப்படும் மிக நுண்ணிய வைரசினால் குறித்த நோய் உருவாக்கப்படுகிறது. எய்ட்சை உண்டாக்கும்  எச் ஐ   வைரஸ், மனித  உடலின் நிர்ப்பீடண தொகுதியை நேரடியாக தாக்குகிறது. அதன் காரணமாக மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி படிப்படியாக குறைந்து, பிற்காலத்தில்  பலவிதமான நோய்களுக்கு மனிதன் உட்பட்டு,  இறக்க நேரிடும். ஒருவர் பலருடன் உடலுறவு கொள்ளுதல், பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ளுதல், போன்றவை எய்ட்ஸ் நோய் உருவாகுவதற்கு பிரதான காரணமாகும். எனினும் வைத்திய நிறுவனங்களில் பாதுகாப்பற்ற சிகிச்சை முறை, போன்றவையும் எய்ட்ஸ் நோய் தொற்றுவதற்கு காரணமாக அமைகின்றன. மேலும் எய்ட்ஸ் நோயானது தாயிடமிருந்து,  குழந்தைக்கு பரவும் சந்தர்ப்பமும் அதிகம் நிகழ்ந்திருக்கிறது. கர்ப்ப காலம் , மகப்பேரு காலம் மற்றும் தாய்ப்பாலூட்டும்  காலங்களில் குழந்தைகளுக்கும் எய்ட்ஸ் நோய் தொற்றும் வாய்ப்பு காணப்படுகிறது. எச் ஐ வியானது மனித உடலின் எல்லா திரவங்களிலும் படிந்திருக்கிறது. எனினும் இரத்தம் , விந்து, தாய்ப்பால் மற்றும் பெண்ணுறுப்புக்களில் உருவாகும் திரவங்கள் என்பவற்றினூடாகவே அதிகளவில் பரவுகிறது. இதன்காரணமாகவே பாதுகாப்பற்ற உடலுறவு எய்ட்ஸ் நோயை தோற்றுவிக்கும் முக்கிய காரணியாக மாறுகிறது. ஆனால் எய்ட்ஸ் நோய் தொற்றுக்கு உள்ளானவர்களிடம்  நாம் சாதாரண சமூக பழக்க வழக்கங்களில் ஈடுபவடுவதினூடாகவோ, கை குழுக்குதல் , தொடுதல், கட்டியணைத்தல், விளையாடுதல் ஆகியவற்றினூடாகவோ ,வியர்வை ,  கண்ணீர், சிறுநீர் மற்றும் பொதுக்கழிப்பறைகளை பயன்படுத்துதல்,  அவர்கள் பயன்படுத்தும் உணவுப்பாத்திரத்தை பயன்படுத்துதல், தும்மல், இருமல் , அவர்கள் பயன்படுத்தும் ஆடைகள்  மற்றும் முத்தமிடுதல் ஆகியவற்றினூடாகவும் பரவுவதில்லை. எச் ஐ வி நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களிடம் பலருக்கு அதன் ஆரம்பநிலையில் அதற்கான அறிகுறிகள் தெரிவதில்லை. எனினும் சிலருக்கு புளு காய்ச்சல் எனப்படும் அறிகுறி எச் ஐ வி நோய்த்தொற்றுக்கு உள்ளாகி 3 அல்லது 4 வாரங்களில் தெரியவரும்.  இந்நிலையில்  எச் ஐ வி நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களில் குழந்தைகளுக்கு இரண்டு வருடங்களில் அதன் நோய் அறிகுறிகள் தென்படும். எனினும் வயது வந்தவர்களுக்கு சுமார் 10 வருடங்களுக்கு பின்னரே அதன் நோய் அறிகுறிகள் வெளிப்படும்.  உடல்நலக்குறைவு , காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு, இரவு நேரங்களில் வியர்வை, நடுக்கம்,  வயிற்றுப்போக்கு, வாந்தி,  நெரிக்கட்டுதல்,  போன்ற அறிகுறிகள் வெளிப்படும்.  ஆரம்பநிலையில் எச் ஐ வி தொற்றை கண்டுபிடிப்பது கடினமான விடயமாகும். உடலின் நோய் எதிர்ப்பு கலங்கலான வெண்குருதி சிறுதுணிக்கைகளை எச் ஐ  வைரஸ் முற்றாக அழித்து, உடலிலுள்ள ஏனைய தொகுதிகளையும் ஊடுறுவிய பின்னர், எய்ட்ஸ் நோய்க்கான அறிகுறிகள் வெளிப்படும். உடல் எடை குறைவு, தொடர்ச்சியான காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஆகியன , எச் ஐ வியின் மிக முக்கிய அறிகுறிகளாகும். இவ்வாறு மனிதனை அணு அணுவாக கொல்லும் எய்ட்ஸ் நோய், முதன்முதலில் கடந்த 1981 ம் ஆண்டு,  கண்டுபிடிக்கப்பட்டது.  அமெரிக்காவை சேர்ந்த நபரொருவரே முதலாவது எய்ட்ஸ் நோயாளியாக கண்டுபிடிக்கப்பட்டார். குறித்த நோயாளி கண்டுபிடிக்கப்பட்டு, 7 வருடங்களுக்குள் அதாவது கடந்த 1988 ம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ம் திகதிவரை ஒரு லட்சத்து, 19 ஆயிரத்து 818 பேர் நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். எனினும் குறித்த நோயை உருவாக்கும் வைரஸ்   கடந்த 1983 ம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தபோதிலும் கடந்த 1986 ம் ஆண்டே  குறித்த வைரஸ் எச் ஐ வி என அடையாளம் காணப்பட்டு, பெயரிடப்பட்டது.  அதற்கமைவாக எய்ட்ஸ் தினம் பற்றிய எண்ணக்கரு முதன்முதலாக கடந்த 1988 ம் ஆண்டில் நடைபெற்ற எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. குறித்த மாநாட்டிலேயே எய்ட்ஸ் தினம் அனுஸ்டிக்கப்படவேண்டுமென தீர்மானம் எட்டப்பட்டது. அதற்கமைவாகவே ஒவ்வொரு டிசெம்பர் மாதம் முதலாம் திகதி, எய்ட்ஸ் தினம் அனுஸ்டிக்கப்படவேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும், டிசெம்பர் மாதம் முதலாம் திகதி  எய்ட்ஸ் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது,  ஒவ்வொரு நாட்டு அரசுகளும், தன்னார்வ தொண்டர் நிறுவனங்களும் இந்நாளை ஒவ்வொரு ஆண்டும் நடைமுறைப்படுத்தி வருகின்றன. எய்ட்ஸ் மேலும் பரவாமல் தடுக்குவும், அதனால் ஏற்பட்ட பாதிப்புக்களை குறைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் பிரதான நோக்கமாகும். இந்நிலையில் கடந்த 1996 ம் ஆண்டு, எய்ட்சுக்காக கூட்டு ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சி ,  செயல்பாட்டிற்கு வந்தது. இதுவே,  உலக எய்ட்ஸ் தினத்திற்கான திட்டம் மற்றும் ஊக்குவிப்பை செய்தது.  அதனைத்தொடர்ந்தே கல்வியினூடாக எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டம் நடைமுறைக்கு வந்தது. ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு கருப்பொருளின்கீழ், உலக எய்ட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 1988 ம் ஆண்டு முதல் ,2004 ம் ஆண்டு வரை எய்ட்ஸ் தினம் ஐக்கிய நாடுகள் சபையின் எய்ட்ஸ் நிறுவனத்தால், நேரடியாக மேற்கொள்ளப்பட்டுவந்தது. எனினும் கடந்த 2005 ம் ஆண்டு முதல் இதன் பொறுப்பு உலக எய்ட்ஸ் பிரச்சாரம் எனும் அமைப்பிடம் , ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்முறை பூச்சியமாக்குதல் எனும் தொனிப்பொருளில் சர்வதேச எய்ட்ஸ் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. எய்ட்சுக்கான குறியுPடாக சிவப்பு நிற நாடா பயன்படுத்தப்படுகிறது. உலகில் அதிகளவான எய்ட்ஸ் நோயாளர்களை கொண்ட நாடாக, தென்னாபிரிக்கா காணப்படுகிறது.  அங்கு அதிகளவாக பெண்களே எச் ஐ வீ தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். தென்னாபிரிக்காவை தொடர்ந்து, நைஜீரியா மற்றும்  இந்தியா ஆகிய நாடுகள் எச் ஐ வீ நோயாளர்களை அதிகம் கொண்ட நாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கடந்த 2006 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி , 3லட்சத்து 30 ஆயிரம் குழந்தைகள் உட்பட 2.1 மில்லியன் மக்கள், எச் ஐ வி தொற்றினால் உயிரிழந்திருந்தனர்.  39.5 மில்லியன் மக்கள் எச் ஐ வீ நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியது. இதேவேளை இலங்கையிலும் எய்ட்ஸ் நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்கள் காணப்படுகின்றனர். இவ்வருடம் மாத்திரம் எய்ட்ஸ் நோயினால் 22 பேர் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரத்து 597 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உலகளாவிய ரீதியில் தற்போது, எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வுகள் அதிகரித்துள்ளதாகவும், ஆரம்பகாலத்தை விட தற்போது அதன் தொற்று குறைவடைந்து வருவதாகவும், சுட்டிக்காட்டப்பட்டாலும்,   எச் ஐ வீ நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களின் வீதம் , அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.  இதுவரை எச் ஐ வீ யினை முற்றாக குணப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கப்படாவிடினும், அதன் தாக்கத்தை குறைப்பதற்கு மனிதனால் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பாவனையிலும் உள்ளது. குணப்படுத்தவே முடியாது என மனிதக்கடவுள்களான விஞ்ஞானிகளாலும்,  வைத்தியர்களாலும் கைவிடப்பட்ட குறித்த நோயிலிருந்து இனிவரும் சமுதாயம் தங்களை பாதுகாத்துக்கொள்வது அவசியமாகும். ஒருவனுக்கு ஒருத்தி எனும் எமது பண்பாடு எய்ட்ஸ் நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியுமென்பதை வலியுறுத்தி நிற்கிறது.  ஆசைக்கு அடிமைப்பட்டு ஆபத்தை விலைகொடுத்து வாங்குவதை மனிதகுலம் நிறுத்த வேண்டும். எச் ஐ வீ எனும் கொடூர அரக்கனின் பிடியிலிருந்து, இந்த உலகம் , விரைவில் விடைபெறவேண்டும்.  அதற்கு ஆறரிவு கொண்ட மனிதஇனம் நாம் குறித்த நோய் தொடர்பான விழிப்புணர்வை தங்களுக்குள்ளும், பிறருக்கும் ஏற்படுத்தி தொற்றுநோயற்ற சமுதாயத்தை உருவாக்க முன்வரவேண்டும். ஆபத்தான ஆசையை எறிப்போம். எய்ட்சை பூச்சியமாக்குவோம்......................................... பிரசன்னா 

No comments:

Post a Comment

hi